நாலாப்புறமும் ஒளி சூழும்
நாதரின் மீலாது காண்போம்
சந்தோஷ சேதி வரக்காண
சர்தாரின் நினைவிற்றிழைப்போம்
ஆதவனும் அம்புலியும் சேர்ந்தே
நாதரவர் பிறப்பினை கொண்டாடும்
பன்மீனும் நன்னபியின் ஒளியால்
மின்னும் படியாற் கொண்டாடும்
ஆனந்தக் களிப்பால் கவி பாடி
அண்ணலவர் அருங்குணமே கூறி
கொண்டாடும் அவர் அன்பர் யாரும்
இன்னருளைப் பெற்றவரே காண்பீர்
இரசூல் நயினார் பிறந்த நாளில்
இல்லங்கள் வீதிகள் துலங்கும்
பன்னிற தீபங்கள் இலங்க
நன்னாளை நாம் எண்ணி மகிழ்வோம்
ஒளிவார்ந்த மனிதர் எம் நபிதாம்
உலகத்தை நிர்வகிப்போர் என்றும்
களியோடு கூறும் அன்னவர்தாம்
கனி நபியின் கோஷம் உரைப்பர்
மன நாட்டங் கொண்டிந்த மஹ்பிலில்
மாண்பாய் அமைந்தோர்கள் யார்க்கும்
பன்னாட்டம் இரையருளாற் கூடும்
நன்னாளை நாம் எண்ணி மகிழ்வோம்
கவ்துல் வரா, கன்ஜபக் ஷும்
கன்னல் மொழி ரஜா பீரும்
காஜாவெனும் ஏழைக்காவலர்
எல்லாரும் இந்நாளில் மகிழ்வார்
மரங் கூட நபி மாண்பறிந்ததே
சிறு கற்கூட நபியன்பை விழைந்ததே
கருணையென் நபி எமது பாக்யமே
அருளாளனைப் போற்றி புகழ்வோம்
நபி புகழை புகழ்ந்தோதும் போது
கவி இதயம் புதுமையால் நிரம்பும்
புகழோதும் ஏழையரெம் மீது
ரகுமானருள் புரிவான் ஆமீன்