ஒளியாம் நபிகள் வந்தார்கள்
ஒளியைக் கொண்டு தந்தார்கள்
எல்லா உலகும் ஒளியாய்க்காணும்
வழியைக் காட்டி தந்தார்கள்
வானின் பானும் மின்னும் மீனும்
மன்னிய ரொளியாலிலங்கினவே
அண்ணல் நபியின் உதயம் நினைந்து
புண்ணியம் சேர்க்க வாரீரோ
மஹ்பூபுவின் மஹ்பூபாம் நபி
அஹ்மதர் புகழையோதிடுவோம்
தீதுகள் களைந்து மாதவம் சேர்த்து
நாதர் நல்வழியில் சார்ந்திருப்போம்
அருளொடு அன்பாய் நிலைத்திடும் ஏகன்
அருளாய் அவனியில் பிறந்தோரை
“யா ரசூலல்லாஹ்” என்றேங்கி
இரைந்தே காதலில் கரைந்திடுவோம்
இல்லந்தோறும் வீதி(கள்) தோறும்
அவர் புகழ் பாடி மகிழ்த்திருப்போம்
நல்லவராகும் வழியினைக் காட்டும்
அண்ணலர் அன்பில் நிலைத்திருப்போம்
இம்மையேயன்றி மறுமை யந்நாளிலும்
மன்னவர் புகழே உயர்ந்திருக்கும்
மர்ஹபன் யா முஸ்தபா – என்றேற்றி
பரவசம் பூண்டிருப்போம்
புண்ணியம் சுமந்த அன்னயராமினார்
கண்ணிய பாலகர் பிறந்ததினால்
மண்ணிலும் விண்ணிலும் முஃமினானோர்
கண்கள் குளிர்ச்சி கண்டனரே
ஈது மீலாதுன்னபியை
இகமதில் மகிழ்வுடன் கண்டவர்கள்
தீது உள்ளோராயினுங் கூட
பாதகம் துறந்து சிறப்பாரே
காலைக் கதிரும் கூட மதீனா
ஒளியை பெற்று விரிந்திடுமே
மாலை மதியும் மீனும் அதுபோல்
மன்னவர் ஒளியை இரந்திடுமே
நாதியற்றவர் துயரம் தோய்ந்தவர்
பீதி யகற்றும் அரு மருந்தே
நாதர் தோன்றிய ஈது மீலாதெனும்
காதல் தினம் தான் உணர்வீரே
சாந்தொளி அண்ணலர் வழிதனில் வந்த
சந்ததியனைவரும் ஒளியினரே
தூயவரன்னவர் நிறையொளியெல்லாம்
நூரு முஹம்மதர் கண்ணொளியே