காணலாம் கந்தூரி காட்சி
காயலூரின் முத்தொலி யென்
காரணராம் செய்யிதஹ்மது
காவலர் தைக்கா வதனில்
சொர்க்க சுப சேதி பெற்ற
சோபனர்கள் பத்துப் பேரில்
முத்தி முதலாக நின்ற
சித்தீக் அதீக் மரபினர் காண்
வாகுடனே வைகறையில்
சேகரமாய்த் தொழுத பின்னர்
வேதியர்கள் சூழ்ந்து ஓதும்
வேத நாதம் கேட்க வாரீர்
கருக்கல் மஃரிப் வணக்கம் செய்து
கற்றவர்கள் சூழ நின்று
கொற்றவனை எண்ணி திக்ர்
ஆற்றுவதைக் காண வாரீர்
நற்கருப்பஞ் சாறதனில்
நறுங் கருந்தேன் கலந்த பாங்காய்
நன்னெறி வஃழு கேட்க
நாதர் பூங்கா ஏகி வாரீர்
நறும் புகையும் மலர் மணமும்
நாற்றிசையும் சூழும் தைக்கா
அற்புத விளக்கினையும்
ஆர்வமுடன் காண வாரீர்
அஞ்சிறை அஞ்சுகமும்
அஞ்சணக் குயில் தோகையும்
தஞ்சமென வந்திறங்கிக்
கொஞ்சும் தைக்கா காண வாரீர்
காணக் களியூறும் தைக்கா
காமிலான முத்தொலிகள்
காரணங்கள் சொல்லி மாளா
கருத்திசைந்து கேட்க வாரீர்
பேரர் அழுங் காரணத்தை
தூரத்திருந்தே யறிந்து
பிள்ளை மனங் களிப்புற
நள்ளிரவில் கனி கொணர்ந்தார்
மானுட இயல்பதனால்
மறந்து போன பேரருக்கு
விட்டுப் போன நோன்பொன்றினை
சுட்டிக் காட்டி நோற்கச் செய்தார்
கைவிளக்கில் நெய் தீர
காரிருளில் பேரர் கிலி
தீர்க்க வானின் வெள்ளி யொன்றால்
நூர்ந்த திரி ஒளிரச் செய்தார்